இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014

இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற  திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர்.

மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது.

இவ்வாலயத்தின் திருவிழாவில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுப்பதற்கு தனவந்தர்கள் முன்வராமையை அறிந்துகொண்ட கழகத்தார், ஊர் மக்களோடு மக்களாக கழகமும் இவ்வாலயத்தின் திருவிழாக்கு தோள்கொடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, கழகம் அன்னதானத்தை பொறுப்பெடுத்தமை ஊர் மக்களால் பாராட்டுக்குரியதாகியது.

அன்னதானத்தின்போது கழகத் தோழர்களுடன் ஊர் மக்களும் உணவு சமைக்கும் பணியில் தாமே முன்வந்து ஈடுபட்டிருந்தனர்.கழகம் ஊர்மக்களுடன் ஐக்கியமாக இந்நிகழ்வு வரப்பிரசாதமாக அமைந்தது எனலாம்.