கொழும்பு விவேகானந்த சபையிற் கழகத் தலைவரின் சொற்பொழிவு
இலங்கை சைவநெறிக் கழகத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நன்றி பாராட்டி கொழும்பு விவேகானந்த சபைத் தலைவர் உரையாற்றும்போது, கொழும்பு விவேகானந்த சபையானது தொடங்கப்படும்போது சைவ சபையாகவே கூட்டப்பட்டதென்றும், அக்கூட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் இறையடி எய்தியமையினால், அவருடைய பெயரை அவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் சூட்டிக்கொண்டு தொடங்கப்பட்டதென்றும், அங்ஙனம் தொடங்கினபோதும் சைவசித்தாந்த மரபில் இயங்கும் சபையாகவே சபை உருவாக்கப்பட்டதென்றும், தொடங்கப்பட்ட காலந்தொட்டு சைவசித்தாந்த சபையாகவே இயங்கி வருவதும், சைவசமய மறுமலர்ச்சிக்குரிய பல்வேறு நூல்களைப் படைத்துப் பரப்பிவரும் வரலாற்றுடையதாகவும் சைவபோதினி என்னும் பெயரில் சைவப் பாடத்திட்ட நூல்களை வெளியிட்ட சிறப்புடையதாகவும் விளங்கும் சபையென்று விளக்கினார். கொழும்பு விவேகானந்த சபை சைவசமய சபையாகவே எக்காலமும் விளங்கும் என்றும், அதற்கு எந்தவொரு கேடும் வராது தமிழர் போற்றவேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.








