புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் "சிவலிங்கம்" பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், இசுலாமிய மதத்தினரின் ஊர்களால் சூழப்பட்ட பகுதியில் இருக்கும் அடிப்படை வசதிகள் நலிந்த பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட நிலையிலுள்ள சைவத்தமிழ்க் கிராமம் என்பதனால்,  இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையைப் பெற்று, அவர்களின் வேண்டுதலை பூர்த்திசெய்யும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டது. பஞ்சலோக சிவலிங்கத்தினை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் பெற்று, பெரியசந்திக் கிராமமக்களின் வழிபாட்டிற்காக, அங்குள்ள ஐயனார் கோயிலிற்கு  வழங்கப்பட்டது.

இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வேண்டிக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக, அகில இலங்கை இந்து மாமன்றத்தால் பஞ்சலோக சிவலிங்கம் கொள்வனவு செய்யப்பட்டு, 
28-06- 2019ஆம் நாள் இலங்கை சைவநெறிக் கழகத்தாரிடம் கையளிக்கப்பட்டது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் திரு.முத்துக்குமாரசுவாமி அவர்களை அழைத்துக்கொண்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி ஆகியோர் நேரடியாக புத்தளம் பள்ளிவாசல்துறை,பெரியசந்திக் கிராமம் ஐயனார் ஆலயத்திற்கு 05-07-2019ஆம் நாள்  பயணஞ் செய்து, பஞ்சலோக சிவலிங்கத்தினை அவ்வாலய நிர்வாகசபையினரிடம் கையளித்தனர்.

சைவவழிபாடுகள் அவ்விடத்திற் மேலும் வலுப்பெற இப்பணி ஏதுவாக அமையுமென்ற நிதர்சனத்திற்கு அமைவாக, கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி செ.உதயகௌரி அவர்களால் செவ்வனே திட்டமிடப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.